கடவுள் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது விபரீதம்; கால்வாயில் மூழ்கி 4 பேர் பலி

கடவுள் விநாயகர் சிலையை நேற்று இரவு சிலர் கால்வாயில் கரைக்க சென்றனர்.

Update: 2022-09-09 20:24 GMT

Image Courtesy: PTI (File Photo)

சண்டிகர்,

இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும். இந்து மத கடவுள் விநாயகர் பிறந்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகள், பொது இடங்களில் கடவுள் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோல், வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்ட கடவுள் விநாயகர் சிலைகளை ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரியானா மாநிலம் மகேந்திரகட் மாவட்டத்தை சேர்ந்த 9 இளைஞர்கள் நேற்று இரவு கடவுள் விநாயகர் சிலையை அப்பகுதியில் உள்ள கால்வாயில் கரைக்க சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக 9 இளைஞர்களும் தண்ணீரில் மூழ்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் 5 இளைஞர்களை மீட்டனர். ஆனால், நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல், அம்மாநிலத்தின் சோனிபெட் மாவட்டத்தில் யமுனை ஆற்றில் கடவுள் விநாயகர் சிலையை சில இளைஞர்கள் கரைக்க சென்றனர். அப்போது, 2 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்