காங்கிரஸ் தலைவர் பதவி போட்டியில் இருந்து விலக மாட்டேன்: சசிதரூர் திட்டவட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

Update: 2022-10-09 09:04 GMT

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் காந்தி குடும்பத்து ஆதரவு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன. மேலும் சசிதரூரை போட்டியில் இருந்து வாபஸ் பெற பலர் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி மறுத்துள்ளார். தங்கள் குடும்பம் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் தேர்தல் நியாயமாக நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சூழலில் தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து விலக சசிதரூர் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல்கள் வந்தன.

இந்த தகவலை சசிதரூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனக்கும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் நடப்பது நட்பு போட்டி. இதில் இருந்து நான் விலகப்போவது இல்லை. ஓட ஆரம்பித்து விட்டேன். இனி நிறுத்தப்போவதில்லை. இறுதி வரை போராடுவேன் என்று அவர் கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்