இளம்பெண்ணை கொன்று உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்த தந்தை கைது

கோலாரில், வேறு சாதி வாலிபரை காதலித்ததால் இளம்பெண்ணை அவரது தந்தையே கொன்று உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த இளம்பெண்ணின் தந்தையையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாய், அண்ணனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-08-27 18:45 GMT

கோலார்:-

காதல்

கோலார்(மாவட்டம்) புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்லி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் கவுடா. விவசாயியான இவரது மகள் ரம்யா(வயது 19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் வேறு சாதியை சேர்ந்தவர் என்று தெரிகிறது. இதுபற்றி அறிந்த வெங்கடேஷ் கவுடா காதலை கைவிடும்படி கூறினார். ஆனால் ரம்யா தனது காதலை கைவிடவில்லை.

இதனால் அவர் கடும் கோபத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி முதல் ரம்யா மாயமானார். இதனால் கிராமத்தினர் ரம்யாவை பற்றி விசாரித்தனர். அப்போது ரம்யா திடீரென இறந்து விட்டதும், அவரது உடலை அவரது தந்தை மற்றும் நெருங்கிய உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் அடக்கம் செய்துவிட்டதும் தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்கள்

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுபற்றி கோலார் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ரம்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் போலீசாருக்கு கூறியிருந்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் போலீசார் ரம்யாவின் தந்தை வெங்கடேஷ் கவுடாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

அதாவது வேறு சாதி வாலிபரை காதலிப்பதை கண்டித்தும் தனது மகள் அதை கேட்கவில்லை என்றும், அதனால் அவளை கழுத்தை நெரித்து ஆணவக்கொலை செய்துவிட்டதையும் வெங்கடேஷ் கவுடா கூறினார். அதுமட்டுமின்றி யாருக்கும் தெரியாமல் தனது நெருங்கிய உறவினர்களின் உதவியுடன் இறுதிச்சடங்கு செய்து ரம்யாவின் உடலை சுடுகாட்டில் புதைத்து விட்டதையும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் இந்த கொலையை அரங்கேற்ற தனக்கு தனது மனைவி மஞ்சம்மா, மகன் சுரேஷ் ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக அவர் கூறினார்.

ஆணவக்கொலை

இதையடுத்து போலீசார் வெங்கடேஷ் கவுடா, அவரது மனைவி மஞ்சம்மா, மகன் சுரேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். நேற்று காலையில் தாசில்தார் ஹர்ஷவர்தன் முன்னிலையில் போலீசார் ரம்யாவின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து இவ்வழக்கில் தொடர்புடைய வெங்கடேஷ் கவுடாவின் உறவினர்களை தேடிவருகிறார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததால் மகளை, தந்தையே ஆணவக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்