தொழிற்சாலையில் இருந்து ரூ.1800 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு படை மற்றும் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2024-10-06 10:10 GMT

புதுடெல்லி:

மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே, ஒரு தொழிற்சாலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ரூ.1814 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு படை (ஏ.டி.எஸ்) மற்றும் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்.சி.பி.) அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது இந்த போதைப்பொருள் சிக்கியது.

இத்தகவல் மற்றும் புகைப்படங்களை குஜராத் உள்துறை இணை மந்திரி ஹர்ஷ் சங்கவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, குஜராத் ஏ.டி.எஸ்., மற்றும் டெல்லி என்.சி.பி.க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

"போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராடுவதில் நமது சட்ட அமலாக்க அமைப்புகளின் முயற்சிகளை இந்த சாதனை காட்டுகிறது. நமது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர்களின் கூட்டு முயற்சி முக்கியமானது.

சட்ட அமலாக்க அமைப்புகளின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்தியாவை பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான நாடாக மாற்றுவதற்கான பணியில் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.டி. போதை மருந்துகள் ஆய்வகத்தில் செயற்கையாக தயாரிக்கப்பட்டவை. அவை மெத்தம்பெட்டமைன் போன்றே போதை தரக்கூடியவை.

Tags:    

மேலும் செய்திகள்