டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-06-20 15:32 GMT

புதுடெல்லி,

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என்று உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

பின்னர் கடந்த 2-ம் தேதி மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 3-ந்தேதி வரை நீட்டித்து நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி ரோஸ் அவென்யூ நீதிமன்ற விடுமுறைக்கால நீதிபதி நியாய் பிந்து உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறை அதிகாரிகளிடம் ஜாமீன் உத்தரவு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, நாளை அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜாமீன் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை நாளை டெல்லி ஐகோர்ட்டில் தடை கோர வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்