இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது வழக்குப்பதிவு

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-07-09 06:47 GMT

பெங்களூரு,

விராட் கோலிக்கு சொந்தமான 'ஒன்8 கம்யூன் பப்' என்ற நிறுவனம் டெல்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் இருக்கிறது. பெங்களூருவின் எம்ஜி சாலையில் இந்த பப் இயங்கி வருகிறது. இந்த பப் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோலிக்கு சொந்தமான பப் மட்டுமின்றி எம்ஜி சாலையில் இயங்கும் பல்வேறு பப்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இயங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் பப்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட போலீசார் அனுமதித்துள்ளனர். இருப்பினும், இந்த அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நள்ளிரவு 1.30 மணி வரை இந்த பப்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் தான் தற்போது விதிகளை மீறிய பப்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "இரவில் அதிக சத்தத்தில் பாடல்கள் போடப்படுவதாகவும் இது தொந்தரவாக இருப்பதாகப் பலரும் புகாரளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணை நடக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்