பா.ஜ.க. உறுப்பினர் சேர்ப்பு பணி 2-ந்தேதி தொடங்குகிறது

பா.ஜ.க. உறுப்பினர் சேர்ப்பு பணி 2-ந்தேதி தொடங்குகிறது.

Update: 2024-08-27 22:15 GMT

புதுடெல்லி,

பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்ப்பு பணி 6 ஆண்டுகளுக்கு ஒருதடவை நடத்தப்படுகிறது. ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் 6 ஆண்டுகளுக்கு ஒருதடவை தங்கள் உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில், பா.ஜ.க. புதிய உறுப்பினர் சேர்ப்பு பணி அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி தொடங்குகிறது. இப்பணிக்கான தலைவராக பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வினோத் தாவ்டே கூறுகையில், பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையின் முதல்கட்ட பணி செப்டம்பர் 2-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கும். பின்னர், உறுப்பினர் சேர்க்கை ஆய்வு செய்யப்படுகிறது. இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை அக்டோபர் 1-ந்தேதி தொடங்கி, அக்டோபர் 15-ந்தேதி வரை நடக்கிறது.

உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கும் 2-ந்தேதி, பிரதமர் மோடியின் உறுப்பினர் அட்டையை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புதுப்பித்து வழங்குவார். உறுப்பினர் சேர்ப்பது குறித்து பா.ஜ.க. செயல்வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பணி பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படும். மத்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று உறுப்பினர் சேர்ப்பை தொடங்கி வைப்பார்கள். பொதுமக்கள் அதிக அளவில் பா.ஜ.க.வில் சேர வேண்டும். பா.ஜ.க. வலிமையாக இருந்தால், வளர்ந்த இந்தியாவை உருவாக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்