பிபிசி அலுவலக சோதனை மிகவும் துரதிர்ஷ்டவசமானது - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

பிபிசி அலுவலக சோதனைக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-02-15 18:25 GMT

கொல்கத்தா,

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவணப்படங்களை சமீபத்தில் பி.பி.சி. நிறுவனம் வெளியிட்டது. கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதுபோல அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பி.பி.சி நிறுவனத்தின் நிதி தரவுகள் தொடர்பான மின்னணு மற்றும் காகித ஆவணங்களை ஆய்வு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனைக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில்,

"பிபிசி அலுவலக சோதனை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அரசியல் பழிவாங்கலுடன் பாஜக ஆட்சியை நடத்தி வருகிறது. இது பத்திரிகை சுதந்திரத்தை மட்டும் பாதிக்காது. இதே நிலை தொடர்ந்தால் நாட்டில் எந்த ஊடகமும் இருக்காது. ஊடகங்கள் ஏற்கனவே அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. ஊடகங்களால் குரல் எழுப்ப முடியாது" என்று கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்