காங்கிரஸ் பாதயாத்திரைக்கு போட்டியாக பசவராஜ்பொம்மை, எடியூரப்பா சுற்றுப்பயணம்; இன்று தொடங்குகிறார்கள்.

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் பாதயாத்திரைக்கு போட்டியாகாக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, எடியூரப்பா ஆகியோர் ராய்ச்சூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்கள்.

Update: 2022-10-10 20:27 GMT

பெங்களூரு:

பா.ஜனதா ஆட்சி

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கு தனி ெமஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் ஜனதாதளம் (எஸ்) கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக குமாரசாமி பொறுப்பு வகித்தார். ஆனால் ஆட்சி மீதான அதிருப்தியால் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஒரு ஆண்டு 64 நாளில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதற்கு பா.ஜனதா தான் காரணம் என்றும், ஆபரேசன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிவிட்டதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டின.

இதையடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. 106 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜனதா ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றார். பதவி ஏற்ற 2 ஆண்டுகள் ஆன நிலையில் வயதுமுதிர்வை காரணம் காட்டி பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவை பதவி விலக வலியுறுத்தியது. அதன்படி அவர் பதவி விலகினார். அதையடுத்து பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று ஓராண்டு சமீபத்தில் நிறைவடைந்தது.

காங்கிரஸ் பாதயாத்திரைக்கு பதிலடி

இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) மே மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க அக்கட்சி மேலிடம் விரும்புகிறது. இதற்கான நடவடிக்கையில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கினார். அவர் மைசூரு, துமகூரு வழியாக நேற்று சித்ரதுர்காவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார். அவரது பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதற்கு பதிலடியாகவும், சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டும் பா.ஜனதா மேலிடம் காங்கிரஸ் பாதயாத்திரைக்கு போட்டியாகவும் பா.ஜனதா ஆட்சி மன்ற குழு உறுப்பினர் எடியூரப்பா, முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையை களத்தில் இறக்க முடிவு செய்தது. அதாவது இரு தலைவர்களையும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டம் வகுத்துள்ளது.

ராய்ச்சூரில் இன்று சுற்றுப்பயணம்

அதன்படி ஜன சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளனர். அவர்களின் சுற்றுப்பயணம் வடகர்நாடகத்தில் உள்ள ராய்ச்சூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் ராய்ச்சூரில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர். 50 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்த 2 தலைவர்களும் முடிவு செய்து உள்ளனர்.

தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி, கொப்பல் மாவட்டம் குஷ்டகி, விஜயநகர் மாவட்டம் ஊவினஅடஹள்ளி, பல்லாரி மாவட்டம் சிருகுப்பாவில் அடுத்த 3 நாட்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

அதன்பின்னர் 2 நாட்கள் ஓய்வுஎடுக்கும் பசவராஜ் பொம்மை மைசூருவில் 16-ந் தேதி நடக்கும் எஸ்.சி. சமூக மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் பீதர், யாதகிரி, கலபுரகி மாவட்டங்களில் பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் செய்கிறார். காங்கிரசுக்கு போட்டியாக பா.ஜனதாவும் சுற்றுப்பயணத்தை தொடங்குவதால் கர்நாடக தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்