ஆந்திர சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் அமளி- வெளிநடப்பு

அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினாகள் கருப்பு துண்டு அணிந்து சட்டசபைக்கு வந்திருந்தனர்.

Update: 2024-07-22 10:20 GMT

அமராவதி:

ஆந்திர மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபை மற்றும் சட்டமேலவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஆளுநர் எஸ்.அப்துல் நசீர் உரையாற்றினார்.

ஆளுநர் உரையாற்ற தொடங்கியதும் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தனர். கொலை செய்யும் அரசியலை நிறுத்த வேண்டும், ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். அதன்பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினாகள் கருப்பு துண்டு அணிந்து சட்டசபைக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தொடரில் சட்டம் ஒழுங்கு, கலால் மற்றும் மாநில நிதி நிலைமை தொடர்பாக மூன்று வெள்ளை அறிக்கைகளை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை எக்ஸ்  தளத்தில் உடனுக்குடன் அறிந்துகொள்ள.. https://x.com/dinathanthi

Tags:    

மேலும் செய்திகள்