மக்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு - எதிர்க்கட்சிகள் அமளி

மக்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

Update: 2023-07-25 12:14 GMT

டெல்லி,

மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மணிப்பூர் வன்முறையின் போது கடந்த மே 4ம் தேதி ஆண்கள் கும்பலால் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்த நிலையில் இதில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் கடந்த சில நாட்களாக முடங்கியுள்ளன. அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் கூட்டுறவு சங்க சட்ட திருத்த மசோதா குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா தற்போது பேசி வருகிறார். ஆனால், அவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.  

Tags:    

மேலும் செய்திகள்