தீ வைத்தபோதும் எரியாமல் நின்ற 10 தலை ராவணன் - அதிகாரி சஸ்பெண்ட்...!

நவராத்திரியையொட்டி வட இந்தியாவில் அரக்கர்களின் அரசனாக கூறப்படும் 10 தலை கொண்ட ராவணனின் உருவபொம்மை எரிப்பது வழக்கம்.

Update: 2022-10-07 13:04 GMT

ராஞ்சி,

இந்து மத பண்டிகையான நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, வட இந்தியாவில் நவராத்திரியின் போது அரக்கர்களின் அரசனாக கூறப்படும் 10 தலைகொண்ட ராவணனின் பிரம்மாண்ட உருவபொம்மையை எரிப்பது வழக்கம்.

இந்து மத இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தில் கடவுள் ராமரின் எதிரியாக சித்தரிக்கப்படுபவர் ராவணன். கடவுள் சிவபெருமானின் தீவிர பக்தனாக அறியப்படும் 10 தலைகொண்டவர் ராவணன். இவர், ராமனின் மனைவியான சீதையை இலங்கைக்கு சிறைபிடித்து சென்றதாக ராமாயண இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. கடவுள் ராமர் இலங்கைக்கு சென்று ராவணனை அழித்து சீதையை மீட்டதாக ராமாயண புராணம் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ராவணனை வீழ்த்தி அவரிடமிருந்து சீதையை ராமன் மீட்கும் நிகழ்வை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் நவராத்திரி தசராவின் போது 10 தலைகொண்ட ராவணனின் உருவபொம்மை எரிப்பது வட இந்தியாவில் வழக்கம். அந்த வகையில், வட இந்தியாவின் பல இடங்களில் 10 தலைகொண்ட ராவணனின் உருவபொம்மைக்கு தீ வைத்து எரிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில், நவராத்திரி தசராவையொட்டி சத்தீஷ்கர் மாநிலம் தம்தரி நகரில் ராம்லீலா மைதானத்தில் ராமன் ராவணனை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் 10 தலைகொண்ட ராவணனின் உருவபொம்மைக்கு தீ வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக, தம்தரி நகராட்சி நிர்வாகம் சார்பில் உயரமான மேடை அமைத்து 10 தலைகொண்ட ராவணனின் உருவ பொம்மை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு விஜயதசமியன்று 10 தலை ராவணன் உருவபொம்மையை தீவைத்து எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மேடையின் கீழ் இருந்து அதிகாரிகள் தீ வைத்த நிலையில் 10 தலை ராவணன் உருவபொம்மையின் உடல்பகுதி மட்டுமே தீயில் எரிந்துள்ளது. ராணவ உருவபொம்மையின் 10 தலைகளும் தீயில் எரியவில்லை. இதனால், அங்கு கூடியிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ராவணனின் 10 தலையும் எரியாத நிலையில் உருவபொம்மையை அலட்சியமாக அமைத்ததாக நகராட்சி ஊழியர் ராஜேந்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக 4 அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்