அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் மேற்முறையீட்டு மனு மீது ஜூலை 28ஆம் தேதி விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம்கோர்ட்டு வரும் ஜூலை 28ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

Update: 2022-07-25 17:26 GMT

புதுடெல்லி,

அதிமுக பொதுக்குழு கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் ஓ.பன்னீர் செல்வத்தின் தரப்பு முறையிட்டது. இதற்கிடையே இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுக்குழுவை நடத்தவில்லை என்றால் சுப்ரீம்கோர்ட் தான் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் பரிசீலிக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் சார்பில் இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருந்ததாகத் தனது மனுவில் ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார்.

இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் ஜூலை 28ஆம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் நடைபெறுகிறது. சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு ஓ.பன்னீர் செல்வத்தின் மனுவை விசாரிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்