மைசூருவில் 'ஜெயிலர்' படத்தை பார்த்த நடிகர் சிவராஜ்குமார்

மைசூருவில் 'ஜெயிலர்' படத்தை நடிகர் சிவராஜ்குமார் பார்த்தார். அப்போது அவர் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் நடித்தது பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.

Update: 2023-08-13 21:42 GMT

மைசூரு:-

ஜெயிலர் படம்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அவரது ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையான நடிகர் மோகன்லால் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சிவராஜ்குமார் நேற்று முன்தினம் மைசூருவுக்கு வந்தார். அப்போது அவர், பெங்களூரு-நீலகிரி சாலையில் இருக்கும் தியேட்டருக்கு சென்று 'ஜெயிலர்' படத்தை பார்த்து ரசித்தார். முன்னதாக சிவராஜ்குமாரின் ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ் படத்தில் நடிப்பேன்

பின்னர் படம் முடிந்த வெளியே வந்த நடிகர் சிவராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

'ஜெயிலர்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் நடித்தது பெருமை அளிக்கிறது. தமிழ் படத்தில் முதல் முறையாக நடித்துள்ளேன். இதில் 2 காட்சிகளில் மட்டும் வருகிறேன். இயக்குனர் நெல்சன் எனக்கு தெரிந்தவர் என்பதாலும், அவர் கேட்டு கொண்டதாலும், ரஜினிகாந்த் படம் என்பதாலும் இதில் நடிப்பதற்கு ஒப்பு கொண்டேன். இந்த படம் மூலம் தமிழ் திரையுலகில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல கதை கிடைத்தால் தமிழ் படத்தில் நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்