காருடன் இழுத்து சென்று, இளம்பெண் உயிரிழந்த விவகாரம்; குற்றவாளிகளை தூக்கில் போட கெஜ்ரிவால் வலியுறுத்தல்

டெல்லியில் கார் மோதி இழுத்து சென்று, இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-01-02 11:37 GMT



புதுடெல்லி,


டெல்லியில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் மீது நேற்று அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதுபற்றி அதிகாலை 3.24 மணியளவில் காஞ்ச்வாலா காவல் நிலையத்திற்கு அவசர தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அதன்பின்னர், அதிகாலை 4.11 மணியளவில் இளம்பெண்ணின் உடல் நிர்வாண கோலத்தில் சாலையில் கிடக்கிறது என மற்றொரு அவசர தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது.

இதனையடுத்து, ரோகிணி மாவட்ட போலீசின் குற்ற பிரிவினர் சம்பவ பகுதிக்கு சென்றனர். அந்த பகுதியை பல்வேறு கோணங்களில் புகைப்படங்களும் எடுத்தனர். இதன்பின், உடலை மங்கோல்புரியில் உள்ள எஸ்.ஜி.எம். மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த இளம்பெண் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

அஞ்சலி சிங் என்ற அந்த இளம்பெண் மீது மோதிய காரில் 5 பேர் சென்றது தெரிய வந்தது. காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

காரை ஓட்டி சென்றது யாரென்றும், மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்றனரா? என்பது பற்றியும் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது என்று போலீசார் கூறினர்.

இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் இந்த சம்பவம் பற்றி தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டதுடன், டெல்லி போலீசாருக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளார்.

குடிபோதையில் காரில் சென்றவர்கள் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் மீது மோதி சில கி.மீ. தூரம் இழுத்து சென்றுள்ளனர். டெல்லி காஞ்சவாலா பகுதியில் இளம்பெண்ணின் நிர்வாண நிலையிலான உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது ஆபத்துக்குரிய விசயம்.

இந்த விவகாரத்தில் முழு உண்மையும் வெளிவர வேண்டும். காரில் குடிபோதையில் 5 பேர் சென்றுள்ளனர். இளம்பெண்ணுக்கு எப்படி நீதி வழங்க போகின்றீர்கள் என டெல்லி போலீசாருக்கு சம்மன் அனுப்பி உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் சக்சேனா இன்று கடும் கண்டனம் தெரிவித்ததுடன், வேதனையையும் வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த விவகாரத்தில், ஆளுநர் வினய் சக்சேனாவின் இல்லத்தின் முன் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இன்று நண்பகலில் ஒன்று திரண்டனர். அவர்கள் உயிரிழந்த இளம்பெண்ணுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அவர்கள் கலைந்து போகும்படி கேட்டு கொண்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கும்பலாக ஆண்கள் சிலர் தங்களது காரின் கீழ் இழுத்து சென்றதில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் ஒரு துரதிர்ஷ்டவச சம்பவம்.

குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அவர்கள் தூக்கில் போடப்பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். குற்றங்களில் அரிதினும் அரிது இந்த சம்பவம் என அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி துணை நிலை ஆளுநர் சக்சேனாவிடமும் பேசியுள்ளேன். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கொண்டுள்ளேன்.

அவர்கள் உயரிய அரசியல் தொடர்பு உள்ளவர்களாக இருப்பினும் இந்த விவகாரத்தில் கருணை காட்ட கூடாது என்று கூறினேன். ஆளுநரும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என என்னிடம் உறுதி அளித்து உள்ளார் என்று கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்