ஆந்திராவில் 2 லாரிகள் மோதியதில் 6 பேர் பலி

விபத்தில் படுகாயமடைந்த 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-06-14 06:42 GMT

அமராவதி,

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டதில் இருந்து மீனவர்களை ஏற்றி கொண்டு பந்துமல்லி நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம், சீதனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது அதே வழியில் வந்த மற்றொரு கன்டெய்னர் லாரி அதை முந்தி செல்ல முயற்சித்தது. அப்போது எதிர்பாராத விதமாக கன்டெய்னர் லாரி மீனவர்களை ஏற்றி வந்த லாரி மீது அதிபயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 5 மீனவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த இரண்டு லாரிகளுக்கும் இடையே மரக்கட்டைகளை ஏற்றி சென்ற டிராக்டரும் சிக்கி கொண்டது. இதனால் சம்பவ இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் ஏறத்தாழ 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றனதால் போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்பட்டுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்