வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 2 வயது குழந்தை பலி!

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-09-19 02:57 GMT

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் விபத்துகள் நடந்து வருகின்றன.தியோரியாவில் இன்று அதிகாலை இரண்டு மாடி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த கட்டிடத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இடிந்து விழுந்த வீட்டில் வசித்து வந்த திலீப் (35) அவரது மனைவி சாந்தினி (30) மற்றும் அவர்களது இரண்டு வயது மகள் ஆகியோர் தியோரியாவில் நீண்ட நாட்களாக பாழடைந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இருவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன், மனைவி மற்றும் சாந்தினி (2 வயது) ஆகியோர் கீழ் தளத்தில் உள்ள அறைக்கு அருகில் தூங்கினர். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் திடீரென வீடு இடிந்து விழுந்தது. திடீரென வீடு இடிந்து விழுந்ததில் மூவரும் புதையுண்டனர்.

வீட்டின் கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளுக்கு அடியில் இருந்த அவர்களது உடல்களை அகற்றினர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளுக்குள் புதையுண்ட 3 பேரின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன.

இது குறித்து தகவலறிந்ததும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பக்கத்து வீடுகளில் வசிப்போரையும் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேற்றினர்.கடந்த இரண்டு மூன்று நாட்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த கட்டிட விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, இதே போன்று சுவர் இடிந்த சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்