லடாக்: மலை சரிவில் கட்டிடம் இடிந்ததில் 12 பேர் காயம்

கார்கில் மாவட்டத்தின் கபடி நல்லாவில் அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.

Update: 2024-08-03 07:28 GMT

லடாக்,

லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் மலைச்சரிவில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 12 பேர் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில், மண் அள்ளும் எந்திரத்தின் டிரைவர் உள்பட 12 பேர் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கபடி நல்லாவில் அதிகாலை 3:30 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து மலைச்சரிவில் அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு பணி தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையில் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் அங்கு வசிப்பவர்கள் ஆவார். லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக கவுன்சிலர், கார்கில் துணை கமிஷனர் ஸ்ரீகாந்த் பாலாசாஹேப் சூசே ஆகியோர் மீட்பு பணியை மேற்பார்வையிட்டனர்.

மேலும், மாவட்டத்தின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கட்டிட ஒழுங்குமுறைச் சட்டங்களில் ஏதேனும் மீறல்கள் உள்ளதா என்பதை இந்த குழு சரிபார்த்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்