சபரிமலையில் மகர விளக்கு சீசனில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு

உடனடி தரிசன முன்பதிவு முறையை மீண்டும் கொண்டு வருவதற்காக அரசின் அனுமதியை பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-10-13 00:26 GMT

சபரிமலை,

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி திறக்கப்படுகிறது. கடந்த வருடம் மண்டல, மகர விளக்கு சீசனின் போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுகடங்காமல் இருந்தது. இதில் பாதுகாப்பு குளறுபடியும் இருந்ததாக அரசின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் உடனடி தரிசன முன்பதிவும் ஒரு பிரச்சினையாக கூறப்பட்டது.

எனவே இந்த வருடம் உடனடி தரிசன முன்பதிவை ரத்து செய்து விட்டு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் தினசரி 80 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கப்படும் என சமீபத்தில் நடந்த முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான உயர் மட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு பந்தளம் ராஜ குடும்பம் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் வழக்கம் போல் உடனடி முன்பதிவு தரிசனத்தை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான அலுவலகத்தில் தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் உடனடி தரிசன முன்பதிவு முறையை மீண்டும் கொண்டு வருவதற்காக அரசின் அனுமதியை பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே தினசரி 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்தார். இது தேவஸ்தானத்தின் முடிவு என்ற போதிலும் சபரிமலை கோவில் விவகாரத்தில் தந்திரியின் அனுமதிக்கு பின்னரே அனைத்து முடிவுகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்