தமிழ்நாட்டை புரிந்துகொள்ள `வாழை' படத்தை பாருங்கள்- இயக்குனர் மிஷ்கின்

தமிழ்நாட்டை புரிந்துகொள்ள மாரி செல்வராஜ் இயக்கியுள்ள `வாழை' படத்தை பாருங்கள் என்று இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.

Update: 2024-08-20 21:40 GMT

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாழை'. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது:- உண்மையில் ஒரு நல்ல படம் பார்த்தால், ஒரு வாரம் அந்த படத்தை பற்றி அலசி ஆராய்வதுதான் என்னுடைய வேலையாக இருக்கும். அதேபோல ஒரு மோசமான படத்தை பார்த்து விட்டால், அந்த ஒரு வாரம் முழுக்க எனக்கு காய்ச்சல் வந்தது போல இருக்கும். ஆனால் வாழை படத்தை பார்த்த பிறகு, மாரியின் கிராப்ட்டை பார்த்து நான் அப்படி அதிர்ச்சியாகி நின்றேன். நீங்கள் தமிழ்நாட்டைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், வாழை படத்தை பாருங்கள்.

'கொட்டுக்காளி', 'வாழை' இரண்டு படங்களும் எனக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தன. உலக சினிமாவின் கோட்டை கதவை இரண்டு தமிழ் படங்களும் உடைத்துள்ளன. நான் மேடையில் பேசுவதை பார்த்து விட்டு, நான் சரக்கு அடித்து விட்டு பேசுகிறேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். உண்மையில் நான் சரக்கடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நான் தற்போது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்தியாவில் முதலில் சிக்ஸ் பேக் கொண்ட டைரக்டராக நான் இருப்பேன். உலகத்தின் மிகச் சிறந்த இயக்குநராக நான் பார்ப்பது வெற்றிமாறன், ராம், தியாகராஜன் குமாரராஜா.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்