வீரனுக்கு நிகரான வீராங்கனை வீட்டிலும் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்

‘அமரன்’ படத்தின் அறிமுக விழாவில் எங்களின் கடமையை செய்துவிட்டோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-08 16:23 GMT

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஹே மின்னலே பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்தது இந்த படத்தின் டிரெய்லர் வருகின்ற 18ம் தேதி வெளியாகும் எனவும் அதே தேதியில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமரன் திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி, சாய்பல்லவி, முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படம் குறித்து கமல்ஹாசன் பேசுகையில், "இந்தப் படத்தை கடமை கண்ணியம் கட்டுப்பாடு, குருதிப்புனல், சத்யா ஆகிய படங்களின் வரிசையில் சொல்லி விட முடியாது. அந்த மூன்று படங்களும் புனைக் கதைகள். ஆனால் அமரன் அப்படி இல்லை.

இந்தப் படம் நமக்காக நடந்த ஒரு நிஜம். இந்தக் கதையை ஏன் இப்படி போகிறது என கேட்க முடியாது. இதுதான் கதை. அதை தாங்கிக்க முடிந்தால் தாங்கிக் கொள்ளுங்கள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸை முதலில் கேட்டவர் இந்து. வீரனுக்கு நிகரான வீராங்கனை வீட்டிலும் இருக்க வேண்டும். அதைப் பற்றியும் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். அந்த நிஜம் எல்லா தாய்மார்களுக்கும் புரியும். எல்லா மனிதனுக்கும் புரியும். அதனால் இது வித்தியாசமான கதை. இந்தக் கதையை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இப்படி ஒரு நிகழ்வு நடந்துவிட்டது. அதை நாங்கள் கண்டெடுத்து விட்டோம். இப்படத்தில் எங்களின் பங்கு கடமையை செய்துவிட்டோம் என்பதுதான்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்