சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முதல் பெண் தலைவராக கிறிஸ்டி கவன்ட்ரி தேர்வு
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவராக கிறிஸ்டி கவன்ட்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;

image courtesy:twitter/@iocmedia
ஏதென்ஸ்,
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக 12 ஆண்டுகள் இருந்த தாமஸ் பாச் பதவி விலகுவதையடுத்து சர்வதேச விளையாட்டு அமைப்பில் மிகவும் அதிகாரமிக்க அந்த அரியணையில் அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
இதனையடுத்து இந்த தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டியிட்டனர். அவற்றில் முன்னாள் நீச்சல் வீராங்கனையும், ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை மந்திரியுமான கிறிஸ்டி கவன்ட்ரி, உலக தடகள சம்மேளன தலைவர் செபாஸ்டியன் கோ, ஐ.ஓ.சி. நிர்வாக குழுவின் துணைத்தலைவர் ஜூவான் ஆன்டோனியா சமராஞ்ச் (ஸ்பெயின்) சர்வதேச சைக்கிளிங் சங்க தலைவர் டேவிட் லாப்பரடின்ட், ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தலைவர் மோரினாரி வதானாப், சர்வதேச ஸ்கை மற்றும் ஸ்னோபோர்டு தலைவர் ஜோஹன் எலியாஸ், ஜோர்டான் நாட்டு இளவரசர் பைசல் பின் ஹூசைன் ஆகிய 7 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஒட்டெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஐ.ஓ.சி.யின் 97 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் 49 வாக்குகள் பெற்ற கிறிஸ்டி கவன்ட்ரி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
131 ஆண்டு கால ஒலிம்பிம் கமிட்டி வரலாற்றில் இந்த பதவியை பெறும் முதல் பெண் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார். அத்துடன் ஆப்பிரிக்காவில் இருந்து இந்த பதவியை பெறும் முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.