46-க்கு ஆல் அவுட் ஆனதை விட இது மோசம் - இந்திய அணியை விமர்சித்த நியூசிலாந்து முன்னாள் வீரர்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 46-க்கு ஆல் அவுட் ஆகி மோசமான தோல்வியை சந்தித்தது.

Update: 2024-10-25 10:38 GMT

புனே,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 16 ரன் எடுத்திருந்தது. ஜெயஸ்வால் 6 ரன்களுடனும், கில் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா அணியினர், நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 156 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சாண்ட்னெர் 7 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

முன்னதாக இப்போட்டியில் இந்தியா வெளிப்படுத்திய செயல்பாட்டை முன்னாள் நியூசிலாந்து வீரர் இயன் ஸ்மித் "இப்போட்டியில் இந்தியா வெளிப்படுத்திய பேட்டிங் செயல்பாடு 46க்கு ஆல் அவுட்டான கடந்த போட்டியை விட மோசமானது. குறிப்பாக இந்த சூழ்நிலையில் ஷாட் தேர்வு மிகவும் மோசம்" என்று நேரலையில் விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்