இந்தியா வர விரும்பவில்லை என்றால் பரவாயில்லை... அது ஒரு பொருட்டல்ல - பாக். முன்னாள் வீரர் அதிரடி கருத்து

2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

Update: 2024-08-03 15:52 GMT

லாகூர்,

2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.

மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட தங்கள் நாட்டுக்கு இந்தியா வரவில்லையெனில் அது பாகிஸ்தானுக்கு ஒரு பொருட்டல்ல என அந்த அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார். மேலும் ஐ.சி.சி.நடத்தும் அந்தத் தொடரில் இந்தியா விளையாடவில்லையெனில் அதற்கு ஐ.சி.சி. கவலைப்பட வேண்டுமே தவிர பாகிஸ்தான் கவலைப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவை விளையாட வைப்பது ஐ.சி.சி.-யின் பொறுப்பு என்று தெரிவிக்கும் முஷ்டாக் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இது மிகவும் எளிது. ஒருவேளை இந்தியா விரும்பினால் அவர்கள் வந்து விளையாடலாம். ஒருவேளை அவர்கள் வர விரும்பவில்லை என்றால் பரவாயில்லை. அது ஒரு பொருட்டல்ல. அதைப்பற்றி வம்பு செய்வதில் அர்த்தம் இல்லை. அதனால் எதுவும் நல்லது அல்லது கெட்டதாகி விடாது. ஏனெனில் இது ஐ.சி.சி. நடத்தப் போகும் தொடர். எனவே இந்த விஷயத்தை அவர்கள்தான் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்