கெய்க்வாட், அபிஷேக் சர்மா அணியிலிருந்து கழற்றி விடப்பட்டது ஏன்..? அகர்கர் விளக்கம்

இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா இடம்பெறவில்லை.

Update: 2024-07-22 13:01 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் டி20 அணியில் இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் ஆகியோர் கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமான அபிஷேக் சர்மா 2வது போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதேபோல் மறுபுறம் கில்லை விட அதிரடியாக விளையாடி சிறந்த சாதனைகளை வைத்திருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

மேலும் இந்தியா கடைசியாக விளையாடிய 50 ஓவர் போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த சஞ்சு சாம்சனுக்கும் இலங்கை ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் 15 பேரை மட்டுமே தேர்வு செய்யக்கூடிய அணியில் ருதுராஜ், அப்ஷேக் சர்மா, சாம்சன் ஆகியோரை இடமில்லாததால் தேர்வு செய்யவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "சில நேரங்களில் சிலர் தவற விடப்படுவார்கள். நீங்கள் அவர்களுக்கு பதிலாக யார் தேர்வாகியுள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை தேர்வானவர்கள் தகுதியானவர்களாக இல்லையென்றால் நாங்கள் விளக்கம் கொடுப்போம். எடுத்துக்காட்டாக டி20 உலகக்கோப்பையில் தேர்வாகாதது ரிங்குவின் தவறில்லை. 15 பேர் கொண்ட அணியில் அனைவரையும் தேர்ந்தெடுப்பது கடினம்.

முக்கிய வீரரான ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து வந்ததால் அவரை நாங்கள் அதிகமாக விளையாட வைக்க விரும்புகிறோம். கேஎல் ராகுல் ஒருநாள் உலகக்கோப்பையில் நன்றாக விளையாடினார். ஆனால் அவரைப் போலவே சஞ்சு சாம்சனும் உள்ளார். எனவே தேர்வான வீரர்கள் தொடர்ந்து அசத்துகின்றனர். ஒருவேளை அவர்கள் அசத்தத் தவறினால் காத்திருக்கும் சஞ்சு சாம்சன் போன்றவரை நாங்கள் தேர்ந்தெடுப்போம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்