அந்த விஷயத்தில் பும்ரா என்னை விட சிறப்பாக செயல்படுகிறார் - பாக். முன்னாள் ஜாம்பவான் வீரர் புகழாரம்

பும்ரா தற்சமயத்தில் தமக்கு மிகவும் பிடித்த வேகப்பந்து வீச்சாளர் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-15 12:25 GMT

லாகூர்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்வதாக பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் துல்லியமான யார்கர் பந்தை வீசும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வருகிறார்.

டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வெறும் 4.17 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார்.

அதன் காரணமாக தற்சமயத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் தமக்கு மிகவும் பிடித்த பவுலர் என்று எம்எஸ் தோனி பாராட்டியிருந்தார். அதே போல பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த வரிசையில் ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் தமக்கு மிகவும் பிடித்த வேகப்பந்து வீச்சாளர் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அத்துடன் தம்மால் கூட வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக புதிய பந்தை சரியாக கட்டுப்படுத்த முடிந்ததில்லை என்றும் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். ஆனால் பும்ரா அதை மிகவும் சிறப்பாக கட்டுப்படுத்துவதாக புகழாரம் சூட்டும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"தற்சமயத்தில் பும்ரா உலகில் சிறந்தவராக இருக்கிறார். அவர் புகழின் உச்சத்தில் இருக்கிறார். கட்டுப்பாடு, வேகம், வேரியேஷன் போன்ற அனைத்தையும் கொண்டுள்ள அவர் முழுமையான பவுலர். அவரது பந்துவீச்சை பார்ப்பது விருந்தாக இருக்கும். புதிய பந்தில் அவர் அனைத்து வகையான பிட்ச்சிலும் வேகத்தை பெறுகிறார். அதனாலேயே நீங்கள் அவரை முழுமையான பவுலர் என்று பெயரிடுகிறீர்கள்.

நான் விளையாடிய காலங்களில் புதிய பந்தில் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவுட் ஸ்விங்கரை வீச முயற்சிக்கும்போது சில நேரங்களில் பந்தை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதில் கண்டிப்பாக என்னை விட புதிய பந்தில் ஜஸ்ப்ரித் பும்ரா சிறந்த கட்டுப்பாட்டை கொண்டுள்ளார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்