இலங்கையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த சதி; இந்திய உளவுத்துறை அளித்த ரகசிய தகவல் - இருவர் கைது

இலங்கையில் இஸ்ரேலியர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-10-24 09:23 GMT

கொழும்பு,

இலங்கையில் இந்த மாதம் 19-ந்தேதி முதல் 23-ந்தேதிக்குள் இஸ்ரேலிய குடிமக்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என இந்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை கடந்த 7-ந்தேதி இலங்கை காவல்துறைக்கு இந்திய உளவுத்துறை தெரிவித்தது.

குறிப்பாக கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள அருகம் விரிகுடாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து அருகம் விரிகுடா பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கொழும்புவில் உள்ள அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தூதரகங்கள் சார்பில் தங்கள நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இஸ்ரேலியர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 2 நபர்களை இலங்கை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதில் ஒரு நபர் ஈராக்கில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்