சூடானில் ராணுவம் - துணை ராணுவம் மோதல்; 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளிடையே நடந்து வரும் மோதலில் நேற்று 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Update: 2024-06-06 15:29 GMT

Image Courtesy : AFP

கார்டோம்,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சூடானின் கெசிரா மாகாணத்தில் உள்ள வாத் அல்-நவுரா என்ற கிராமத்திற்குள் நேற்று ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படையினர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு சூடான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் சூடான் ராணுவத்தினர் தங்கள் படைகளை தாக்க திட்டமிட்டதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாத் அல்-நவுரா கிராமத்தின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள ராணுவ படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்