பிரிட்டனின் பிரதமர் ஆனார் ஸ்டார்மர்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடைந்துள்ளது.

Update: 2024-07-05 04:20 GMT

லண்டன்,

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.

கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையான தோல்வியை சந்திக்கும் எனவும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது. பிரிட்டன் நேரப்படி இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் துவக்கம் முதலே  ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களுக்கும் மேல் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. ஸ்டார்மர் தனது சொந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, கட்சியின் தலைவர் ஸ்டார்மர், பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லசை சந்தித்தார். அப்போது அவர், ஸ்டார்மரை பிரதமராக நியமித்தார். இதையடுத்து ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமரானார். அதன்பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்