போருக்கு தயாராகும் ஈரான்; இஸ்ரேல் ராணுவம் தாக்கினால் தக்க பதிலடி கொடுக்க திட்டம்

இஸ்ரேல் நடத்தும் தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.

Update: 2024-10-25 11:59 GMT

Image Courtesy : AFP

டெஹ்ரான்,

இஸ்ரேல் மீது கடந்த 1-ந்தேதி ஈரான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது. சுமார் 180 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. இஸ்ரேலில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது.

இருப்பினும் இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பின் மூலம் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. அதே சமயம், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஈரான் ராணுவத்திற்கு அந்நாட்டின் உயர் தலைவர் அயட்டோலா அலி காமேனி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால், அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் ஈரானில் பெரிய அளவிலான சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டால், பதிலுக்கு ஈரான் ராணுவம் மிகப்பெரிய அளவில் பதில் தாக்குதல் நடத்தும் என்றும், அதே சமயம் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கேற்றவாறு பதிலடி கொடுப்போம் என்றும் ஈரானைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்