அமெரிக்காவுக்கு வாழ்நாள் சேவையாற்றியவர்; பைடனுக்கு நன்றி தெரிவித்து கமலா ஹாரிஸ் பேச்சு

அமெரிக்காவில் தொடங்கியுள்ள ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாட்டில் பேசிய கமலா ஹாரிஸ், வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்காக பைடனுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.

Update: 2024-08-20 03:22 GMT

நியூயார்க்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ், அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்த சூழலில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாடு தொடங்கியுள்ளது. இதனை காண்பதற்காக அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்படுவார். இதனை அவர் ஏற்று கொள்கிறார். இதேபோன்று, துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மின்னசோட்டா கவர்னர் டிம் வால்சும் முறைப்படி வேட்பாளராக இந்த மாநாட்டில் அறிவிக்கப்படுவார்.

இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்று பேசிய கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். அவருக்கு நாங்கள் எப்போதும் நன்றியுடையவர்களாக இருப்போம் என கூறினார்.

நம்முடைய நாட்டுக்கு வாழ்நாள் சேவையாற்றியதற்காக, வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்காக பைடனுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

நாட்டின் ஒவ்வொரு பகுதியை சேர்ந்தவர்களும் மற்றும் அனைத்து நிலையில் வாழும் மக்களும் இந்த மாநாட்டில் கூடியிருக்கின்றனர். வருகிற நவம்பரில் நாம் மீண்டும் ஒன்று கூடி, நாம் முன்னேறி செல்கிறோம் என்று ஒரே குரலில் அறிவிப்போம் என்றும் பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், எப்போது நாம் போராடுகிறோமோ, அப்போது நாம் வெற்றி பெறுவோம் என்று எப்போதும் நாம் நினைவில் கொள்வோம் என்றும் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்