தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - 105 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முன்கூட்டியே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.;

Update:2025-03-27 09:17 IST
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - 105 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாட்டில் வறண்ட காற்று வருகையால் இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் எனவும், ஓரிரு இடங்களில் 105 டிகிரி வரை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இப்போதே வெப்பத்தின் தாக்கத்தை அதிகமாக உணர முடிகிறது. வழக்கமாக ஏப்ரல் மாதம் கடைசியில் இந்த நிலை உருவாகி, மே மாதம் இறுதி வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.

நேற்று மட்டும் ஈரோடு, கரூர், மதுரை, வேலூரில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்) வெப்பம் பதிவாகியிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 31-ந்தேதி வரையில் அதாவது, அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அடுத்த 5 நாட்களில் வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 102.2 டிகிரி (39 செல்சியஸ்) முதல் 105.8 டிகிரி (41 செல்சியஸ்) வரை பதிவாகக் கூடும் என சொல்லப்படுகிறது.

இதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலியில் 98 டிகிரி (37 செல்சியஸ்) முதல் 102.2 டிகிரி (39 செல்சியஸ்) வரை பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 98 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 102 டிகிரிக்கு மேல் பதிவாகக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்