18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.. சென்னைக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை

நாளை மறுநாள் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-13 23:25 GMT

சென்னை,

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று (திங்கட்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுதினம் (புதன்கிழமை) புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு (இன்று முதல் 17-ந் தேதி வரை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது; விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுதினம் (புதன்கிழமை) தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், சில நேரங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றார்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டியும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்தும் தமிழக அரசும் முன்எச்சரிக்கை பணிகளை முடுக்கிவிடுட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்