'தேசத்தின் அனைத்து பொதுத்துறைகளும் காவிமயமாக்கப்படுவது ஏன்?' - செல்வப்பெருந்தகை கேள்வி

தேசத்தின் அனைத்து பொதுத்துறைகளும் காவிமயமாக்கப்படுவது ஏன்? என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-10-22 15:11 GMT

சென்னை,

மத்திய பா.ஜ.க. அரசு, பொதுத்துறை நிறுவனங்களை காவி மயமாக்கி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"தேசத்தில் உள்ள அனைத்து பொதுத்துறைகளும் காவிமயமாக்கப்படுவது ஏன்? வந்தே பாரத் ரெயில், டிடி நியூஸ் சேனல் லோகோவைத் தொடர்ந்து, தற்போது மத்திய பா.ஜ.க. அரசு பி.எஸ்.என்.எல். லோகோவையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது. முன்பிருந்த லோகோவில் இந்தியாவை இணைப்போம் என்றிருந்தது தற்போது பாரதத்தை இணைப்போம் என்றும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறங்கள் பா.ஜ.க.வின் கொடியின் நிறத்தை ஒத்திருக்கிறது.

புதியதாக கட்டிய நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால் எங்கும் காவி நிறம். அதே போல நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியிலிருக்கும் ஊழியர்களின் சீருடைகள் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி, அரசு நிறுவனங்களை காவி மயமாக்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்