இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
அம்பேத்கரை அவமதித்த மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் - தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
அம்பேத்கரை அவமதித்த மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு
அரசியல் சாசனம் மீது நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசும்போது, அம்பேத்கர் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நேற்று இரு அவைகளும் முடங்கின.
இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் இரு அவைகளும் தொடங்கின. அப்போது, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுகிறது என அதன் தலைவர் ஓம் பிர்லா கூறினார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் முடங்கியது. இதனால், அவையை அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து அறிவித்து உள்ளார். இந்த விவகாரம் எதிரொலியாக, 2-வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளரும், பேராசிரியருமான அன்பழகனின் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கத்தர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, இந்திய ராணுவமும், ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசாரும் இணைந்து கூட்டாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள், படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
இதனை தொடர்ந்து வீரர்களும் பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலில், பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
அரசியல் சாசனம் மீது நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசும்போது, அம்பேத்கர் பெயரை தொடர்ந்து கூறுவதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார். அதாவது, அம்பேத்கர், அம்பேத்கர்... என கூறுவது இப்போது 'பேஷன்' ஆகி விட்டது. கடவுளின் பெயரை இப்படி கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்றார்.
அமித்ஷாவின் இந்த கருத்து எதிர்க்கட்சிகளுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கரை அவர் இழிவுபடுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 11.30 மணியளவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அது தொடர்பான அக்கட்சியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.7,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.