நெல்லை நீட் பயிற்சி மைய சர்ச்சை - விடுதி மூடல்

உரிய அனுமதி பெறாமல் விடுதி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

Update: 2024-10-21 10:04 GMT

நெல்லை,

நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் 'ஜல்' நீட் அகாடமி என்ற தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமது பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர் பயிற்சி மையத்தில், மாணவர்களை பிரம்பால் சரமாரியாக தாக்கியும், மாணவிகள் மீது காலணியை தூக்கி வீசியும் உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் போலீசார், ஜலாலுதீன் அகமது மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர் உடனடியாக கேரளாவுக்கு தப்பிச்சென்று விட்டார்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவுப்படி ஜலாலுதீன் அகமதுவை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, சர்ச்சையில் சிக்கிய அகாடமியின் விடுதியில் சமூக நலத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், உரிய அனுமதி பெறாமல் விடுதி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. விடுதியை நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்பதால், சர்ச்சைக்கு உள்ளான அகாடமியின் விடுதி தற்போது மூடப்பட்டுள்ளது.    

Tags:    

மேலும் செய்திகள்