மானிய கோரிக்கையில் செங்கோட்டையனுக்கு பிடித்ததுபோல பதில் சொல்வேன் - அமைச்சர் எ.வ.வேலு
மானிய கோரிக்கையில் செங்கோட்டையனுக்கு பிடித்ததுபோல பதில் சொல்வேன் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.;

சென்னை,
சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய கேள்வி-பதில் நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் கேள்வி எழுப்பி பேசினார். அப்போது பேசிய அவர், ஈரோடு முதல் கோபிசெட்டிபாளையம் வரையில் நான்கு வழிச்சாலை விரிவு படுத்தப்பட்டன. கோபி நகரத்திற்குள் நெரிசல் அதிகமாக ஏற்படுகின்ற காரணத்தின் அடிப்படையில் எங்களது ஆட்சி காலத்தில் புறவழிச்சாலை அமைக்க ஆய்வு பணிகள் மேற்கொண்டு நிதி ஒதுக்கப்படும் சமயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அமைச்சர் இடத்தில் நான்கு முறை கேட்கின்ற போது, அந்த பகுதிக்கு நான் வந்திருக்கிறேன். உடனடியாக செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போன நிதியாண்டில் சொன்னார். ஆனால் அந்த பணிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே அந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "கோபிசெட்டிபாளையத்தை பொறுத்த வரை அங்கு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. உறுப்பினரும் கோரிக்கை வைத்திருக்கிறார். இது தொடர்பாக மானிய கோரிக்கையின் போது அவருக்கு பிடித்த மாதிரி பதில் சொல்கிறேன்" என்று கூறினார்.