தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

Update: 2024-10-19 07:29 GMT

சென்னை,

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 01.11.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள். பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 31 -ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட திட்டமிட்டு உள்ள பலரும் ரெயில், பஸ் என அனைத்திலும் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். இந்த முறை தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. அதற்கு மறுநாளான வெள்ளிக்கிழமை பணி நாளாகும். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்பதால் சொந்த ஊர் சென்றவர்கள் தீபாவளி அன்றே கிளம்ப வேண்டியிருந்தது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை தினம் என்பதால் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை அறிவித்தால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். சொந்த ஊர்களில் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப முடியும் என்பதால், வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.  

இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  




 


Tags:    

மேலும் செய்திகள்