கேப்டனுக்கு செல்ல பெயர் வைத்த பிரதமர் மோடி - பிரேமலதா விஜயகாந்த் பதிவு
பிரதமர் மோடிக்கும் கேப்டன்- விஜயகாந்துக்கும் இடையேயான உறவு அரசியலை தாண்டிய ஒன்று என்று பிரேமலதா கூறியுள்ளார்.;

சென்னை,
தமிழ் திரையுலகிலும் சரி அரசியலிலும் சரி விஜயகாந்துக்கு இணை விஜயகாந்த் மட்டும் தான் என்று சொல்லலாம். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களால் தங்கள் வீட்டு பிள்ளை போல பார்க்கப்பட்டவர். கேப்டன் என அவரை தமிழக மக்கள் அன்போடு அழைத்தனர்.அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற அவர் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார்.ஆனால் எதிர்பாராத விதமாக அவரது உடல் நல பிரச்சினைகள் காரணமாக இறுதிக் காலத்தில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அவரது மறைவை அடுத்து தமிழகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. லட்சக்கணக்கானோர் சென்னைக்கு வந்து அவரை வழி அனுப்பி வைத்தனர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் இன்று வரை அதிகமான மக்கள் வந்து செல்வதில் இருந்தே மக்களிடையே அவருக்கு எந்த அளவு செல்வாக்கு இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும். அரசியலைத் தாண்டி பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்தவர் விஜயகாந்த்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியோடு நெருக்கம் காட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்த் கன்னத்தை தடவி கொடுத்து கட்டியணைத்து வாழ்த்து பெற்றதை மறக்க முடியாது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் விஜயகாந்துக்கும் இருந்த உறவு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி இருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் மோடி ஸ்டோரி என்ற சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. 'தமிழகத்தின் சிங்கம்' என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் இருந்த போது, ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார். கேப்டன் விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என பிரதமர் மோடி செல்ல பெயர் வைத்து அழைப்பார்.
அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று. என பேசியுள்ளார். மேலும், இந்த பேட்டியை அவர் தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக பாஜக கூட்டணி இருந்த நிலையில் அதற்கு பிறகு தேமுதிக பாஜகவில் இருந்து விலகி மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கைகோர்த்தது. தற்போது பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் தேமுதிகவும் அதில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசி இருப்பதன்மூலம் பிரேமலதாவும் பாஜக அதிமுக கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.