கிண்டல் செய்த வாலிபர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய இளம்பெண்

கொதிக்கும் பால் பட்டதில் வாலிபரின் வயிறு உள்ளிட்ட பகுதிகள் வெந்துபோனது.

Update: 2024-05-31 04:13 GMT

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் பிரபல டீ கடை உள்ளது. அந்த கடைக்கு வாலிபர் ஒருவர் டீ சாப்பிட சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் அந்த கடையில் இருந்தார். அப்போது அந்த வாலிபர், இளம்பெண்ணை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

வாலிபரின் கிண்டலால் கொதித்து எழுந்த இளம்பெண் டீ கடையில் கொதித்து கொண்டிருந்த பாலை எடுத்து அந்த வாலிபர் மீது ஊற்றினார். இதில் வாலிபரின் வயிறு உள்ளிட்ட பகுதிகள் வெந்துபோனது. இதனால் வாலிபர் வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது 2 வாரத்தில் திருமணம் நடக்க இருப்பதாலும், அந்த பெண் தன்னுடைய உறவுக்கார பெண் என்பதாலும் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று வாலிபர் போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்