மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறு பரீசிலனை செய்ய வேண்டும் - வானதி சீனிவாசன்

மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறு பரீசிலனை செய்ய வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-16 17:21 GMT

கோவை,

கோவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினருக்கு 40 எம்.பி.க்களை வழங்கிய மக்களுக்கு, அவர்கள் பரிசாக மின் கட்டண உயர்வை கொடுத்துள்ளனர். இந்த மின் கட்டண உயர்வால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படும். மின்கட்டண உயர்வை தமிழக அரசு மறு பரீசிலனை செய்து கட்டண உயர்வை குறைக்க வேண்டும். தமிழக அரசுதான் இந்தியாவிலே அதிகமாக கடன் வாங்கியுள்ளது. தவிர பல மடங்கு வரி உயர்வும் தமிழகத்தில் தான் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினருக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. தொடரும் படுகொலைகள் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன. காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினால் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு கேட்காதா?.

இந்தியா கூட்டணியில் அதிக எம்.பி.க்களை வைத்துள்ள திமுக காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் அரசுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கூட்டணி தர்மம் என்பது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதும்தான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்