மாநில அளவிலான கவிதைப்போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி

வெற்றி பெற்றவர்களுக்கு பாரதி இளம் கவிஞர் விருதும், தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

Update: 2024-09-13 08:12 GMT

சென்னை,

தமிழ்நாடு செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"மகாகவி பாரதியாரின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் 2021ஆம் ஆண்டு முதல் கல்லூரி மாணாக்கர்கள் இடையே மாநில அளவிலான கவிதைப் போட்டி நடத்தி முதல் இடம் பிடிக்கும் தலா ஒரு மாணவனுக்கும், மாணவிக்கும் "பாரதி இளம் கவிஞர்" என்ற விருதுடன் தலா ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி அரசாணை எண் 229 உயர்கல்வித்துறை, நாள் 19.11.2021 இல் உரிய ஆணைகள் வெளியிடப்பட்டு உயர்கல்வித் துறையால் ஆண்டுதோறும் கல்லூரி மாணாக்கர்களுக்கு இடையிலான மாநில அளவிலான பாரதி இளம் கவிஞர் கவிதைப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

2023-24 ஆம் ஆண்டுக்கான பாரதி இளம் கவிஞர் கவிதைப் போட்டி மாநில அளவில் நடத்தப்பட்டு மாணவர் பிரிவில் பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி மாணவர் அ.முகமது அன்சாரி முதலிடம் பிடித்தார். அதேபோல் மாணவியர் பிரிவில் சேலம், புனித சூசையப்பர் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி மு.நிவேதா முதலிடம் பிடித்தார். இவர்களுக்குப் பாரதி இளம் கவிஞர் விருதும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடியால் இன்று (13.09.2024) வழங்கப்பட்டது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்