பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு

பொங்கல் பண்டிகையின்போது, தமிழகம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2024-08-29 13:40 GMT

சென்னை,

2025 தைப் பொங்கல் திருநாளையொட்டி வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்திக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.100 கோடி வழங்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பொங்கல் பண்டிகையின்போது, தமிழகம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது.

இந்த நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறுவதை முன்னிட்டு இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்குத் தேவைப்படும் வேட்டி சேலைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் உற்பத்தி செய்து வழங்கிட ஏதுவாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்பணமாக வழங்கிட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 கோடி ரூபாய் அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் 2025 தைப் பொங்கல் திருநாளையொட்டி, தமிழகம் முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்கு ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், அதேபோல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்