ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-07-14 02:05 GMT

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் விசாரணைக்காக திருவேங்கடத்தை, போலீசார் சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை வடக்கு காவல் கூடுதல் ஆணையர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுஆய்வு செய்து வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்