சென்னையில் யூடியூபர்களை மிரட்டிய விவகாரம் - 3 பேர் கைது

குடிபோதையில் இருந்த இளைஞர்கள், பிரபல யூடியூபரின் கேமராக்களை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-08 05:24 GMT

சென்னை

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் பகுதியில் யூடியூபர்கள் 2 பேர் மின்னணு பொருட்கள் வாங்குவது குறித்து தங்கள் யூடியூபிற்காக, வீடியோக்களை எடுத்து வந்தனர். அந்த சாலையில் மதுக்கடை திறப்பதற்கு முன்பாகவே, மது பானங்களுடன் இருந்த சிலர், சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

போதையில் இருந்த அவர்கள், தங்களை வீடியோ எடுப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு அந்த யூடியூபர்களை மடக்கிப் பிடித்து கேமரா, செல்போன்களை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆயுதம் இருந்ததால் உயிர் பிழைத்தால் போதும் என்று அந்த யூடியூபர்கள் தப்பித்து வந்துள்ளனர்.

100 மீட்டர் இடைவெளியில் போலீசாரின் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சாலைக்கு மறுபுறம் துணை ஆணையர் அலுவலகம் இருந்த போதிலும், பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்றவர்களை போதை ஆசாமிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், யூடியூபர் நந்தா என்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேரை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் ஆகிய மூன்று பேரை கைதுசெய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்