சென்னை விமான நிலைய விரிவாக்கம்: மார்ச் 2026 க்குள் நிறைவடையும் - மத்திய மந்திரி தகவல்
இரண்டாம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் மார்ச் 2026க்குள் நிறைவடையும் என்று மத்திய மத்திரி தெரிவித்துள்ளார்.;

கோப்புப்படம்
புதுடெல்லி,
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் மார்ச் 2026க்குள் நிறைவடையும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை மந்திரி முரளிதர் மொஹூல் தெரிவித்தார். சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் நிலை குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் அவர் பதிலளித்தார்.
இதுதொடர்பாக எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், "2,467 கோடி ரூபாய் செலவில் சென்னை சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இரண்டு கட்டங்களாக மேற்கொண்டுள்ளது. முதல் கட்டத்தின் கீழ், ஒரு புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இது விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகளிலிருந்து 30 மில்லியனாக உயர்த்தி உள்ளது. இந்த முனையம் 08.07.2023 முதல் செயல்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டம் 3வது முனையத்தின் வளர்ச்சியை உள்ளடக்கியது, விமான நிலையத்தின் திறனை ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளாக மேலும் இது மேம்படுத்துகிறது. இந்த கட்ட பணிகளை மார்ச் 2026-ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.