பாலியல் குற்றங்கள்: நீதி வழங்குவதை விட குற்றத்தை மறைக்கவே முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராட்டியத்தில் அப்பாவி குழந்தைகள் மீது இழைக்கப்பட்ட குற்றத்துக்கு நீதி கிடைக்கவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-21 14:42 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம், பீகாரைத் தொடர்ந்து, மராட்டியத்திலும் மகள்களுக்கு எதிரான வெட்கக்கேடான குற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஒரு சமூகமாக நாம் எங்கே போகிறோம் என்று சிந்திக்கத் தூண்டுகிறது..?

பத்லாபூரில் அப்பாவி மகள் இருவர் மீது இழைக்கப்பட்ட குற்றத்திற்குப் பிறகு, நீதி கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வரும் வரை, அவர்களுக்கு ஆதரவான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய போராட்டம் நடத்த வேண்டுமா? பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்துக்குச் செல்வதற்குக் கூட சிரமப்படுவது ஏன்?

நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் நலிந்த பிரிவைச் சேர்ந்த மக்களும்தான்.

எப்.ஐ.ஆர் பதிவு செய்யாதது, பாதிக்கப்பட்டவர்களின் ஊக்கத்தை குலைப்பது மட்டுமின்றி குற்றவாளிகளை தைரியப்படுத்துகிறது.

சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைத்து அரசுகளும், குடிமக்களும், அரசியல் கட்சிகளும் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை, அவர் காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் விருப்பத்தை சார்ந்து இருக்க முடியாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்