அரியானாவில் பா.ஜ.க.வுக்கு மேலும் பலம் சேர்த்த சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள்

சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சாவித்ரி ஜிண்டாலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பார் என தெரிகிறது.

Update: 2024-10-09 10:46 GMT

புதுடெல்லி:

அரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. தோல்வியை தழுவும் என்றும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அந்த கணிப்புகளை பொய்யாக்கி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

90 தொகுதிகள் கொண்ட அரியானாவில் ஆட்சியமைக்க 46 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளது. நயாப் சிங் சைனி முதல் -மந்திரி பதவியில் நீடிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஆளும் பா.ஜ.க.வுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தேவேந்தர் கத்யான், ராஜேஷ் ஜூன் ஆகியோர் இன்று பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்தனர். மத்திய மந்திரியும் அரியானா மாநில பா.ஜ.க. பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் சந்தித்து, பா.ஜ.க.ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். அப்போது, மாநில பா.ஜ.க. தலைவர் மோகன் லால் படோலி உடனிருந்தார்.

கனார் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.வான கத்யான், பா.ஜ.க.வில் இருந்து அதிருப்தி காரணமாக பிரிந்து சென்று கனார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இதேபோல் ராஜேஷ் ஜூனும் பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்தான். இவர் பகதூர்கர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆகியிருக்கிறார்.

இதேபோல் பா.ஜ.க.வில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நாட்டின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பார் என கூறப்படுகிறது. அவரும் இன்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்