சிக்கிமில் காணாமல் போன முன்னாள் மந்திரியின் உடல் கால்வாயில் இருந்து மீட்பு

சிக்கிம் சட்டசபையில் முதல் சபாநாயகராக பதவி வகித்த பெருமைக்குரிய பவுடியாலின் உடல் தீஸ்தா கால்வாயில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.

Update: 2024-07-17 07:33 GMT

கேங்டாக்,

இமயமலையையொட்டிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் முன்னாள் மந்திரியாக இருந்தவர் ஆர்.சி. பவுடியால் (வயது 90). பாகியோங் மாவட்டத்தின் சோட்டா சிங்தம் நகரை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.

இதனை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர். இதற்காக தனியாக சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், புல்பாரி பகுதியில் உள்ள தீஸ்தா கால்வாயில் மிதந்து வந்த அவருடைய உடலை போலீசார் கண்டெடுத்தனர். அதனை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் மற்றும் உடைகளை கொண்டு அவரை போலீசார் அடையாளம் கண்டனர். சட்டசபையில் முதல் சபாநாயகராக பதவி வகித்த பெருமைக்குரியவர். அதன்பின் மாநில வனத்துறை மந்திரியானார். சிக்கிம் அரசியலில் முக்கிய பிரமுகரான அவர், ரைசிங் சன் என்ற கட்சியை தொடங்கி நடத்தினார்.

சிக்கிமின் கலாசார மற்றும் சமூக செயல்முறைகளை பற்றி ஆழ்ந்த புரிந்துணர்வு கொண்டவர். அவருடைய மறைவுக்கு சிக்கிம் முதல்-மந்திரி பி.எஸ். தமங் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவருடைய மறைவை அடுத்து, விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்