டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி உயிரிழப்பு

கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி உயிரிழந்தாள்.

Update: 2024-07-28 03:23 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் மாநில அரசு டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் உயிர் பலிகளை தடுக்க முடியவில்லை. நேற்று தார்வார் மாவட்டத்தில் 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளாள்.

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா கிரேநேர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் கரியப்பா. இவரது மகள் பூர்ணிமா (5 வயது). கடந்த சில நாட்களாக பூர்ணிமா உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாள். பெற்றோர் அவளை தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் நலத்தில் மாற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து டாக்டர்கள் பூர்ணிமாவுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் பூர்ணிமாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.

இதையடுத்து குந்துகோல் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பூர்ணிமா பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்த சம்பவம் குந்துகோல் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்